Archives: மார்ச் 2024

odb

தொடர்புடைய தலைப்புகள்

> odb

துருவிய வெண்ணெய்

ஜே. ஆர். ஆர். டோல்கியேன் இன் "தி  ஃபெல்லோஷிப் ஆஃப் தி ரிங்ஸ்" புத்தகத்தில், பில்போ பக்கின்ஸ் எனும் கதாபாத்திரம் ஆறு தசாப்தங்களாக, இருளான தீயசத்தியைக் கொண்ட ஒரு மந்திர மோதிரத்தைச் சுமந்து செல்வதன் விளைவுகளைக் காட்டுகிறது. அதன் மெதுவாக அழிக்கும் தன்மையால் சோர்ந்து, அது மந்திரவாதி கந்தால்ஃபிடம், "உனக்கு புரியும்படி சொல்லவேண்டுமானால், நான் ரொட்டியின் மீது அதிகமாகத் தடவப்பட்ட வெண்ணெய்யைப் போல, தேவையில்லாமல் இழுக்கப்பட்டும், வலுவிழந்தும் ஏன் உணர்கிறேன்?" என்று கேட்கிறது. எங்கேயாவது  "அமைதியையும், நிம்மதியையும், அறிமுகமானவர்களின் இரைச்சல் இல்லாத" இளைப்பாறுதல் தேடி தனது வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறான் பில்போ.

டோல்கினின் கதையின் இந்த அம்சம் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசி ஒருவரின் அனுபவத்தை எனக்கு நினைவூட்டுகிறது. யேசபேலிடமிருந்து தப்பி, கள்ள தீர்க்கதரிசிகளுடன் மோதிய பின்னர், எலியாவுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. சோர்வுற்ற அவர், "போதும் கர்த்தாவே" (1 இராஜாக்கள் 19:4) என்று கூறி, தன்னை சாக அனுமதிக்குமாறு தேவனிடம் கேட்டார். அவர் தூங்கிய பிறகு, தேவதூதன் அவரை எழுப்பினார், அதனால் அவர் சாப்பிடவும் குடிக்கவும் செய்தார். அவர் மீண்டும் தூங்கினார், பின்னர் தேவதூதன் வழங்கிய உணவை மேலும் சாப்பிட்டார். புத்துயிர் பெற்ற அவர், தேவபர்வதத்திற்கு செல்ல நாற்பது நாட்களின் நடைப்பயணத்திற்கு போதுமான ஆற்றலைப் பெற்றார்.

நாம் உருத்தெரியாமல் உடைக்கப்பட்டிருக்கையில், ​​உண்மையான புத்துணர்ச்சிக்காக நாமும் தேவனை நோக்கலாம். அவருடைய நம்பிக்கை, சமாதானம் மற்றும் இளைப்பாறுதலால் நம்மை நிரப்பும்படி அவரிடம் கேட்கும் அதே வேளையில், நாம் நம் உடலைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். தேவதூதன் எலியாவை உபசரித்தது போல , தேவன் தம்முடைய புத்துணர்ச்சியூட்டும் பிரசன்னத்தை நம்மீதும் பொழிவார் என்று நாம் நம்பலாம் (பார்க்க மத்தேயு 11:28).

தேவனின் முன்னேற்பாடு

ஜூன் 2023 இல் கொலம்பியாவின் அமேசான் காட்டில் ஒன்று முதல் பதின்மூன்று வயதுள்ள நான்கு உடன்பிறந்தவர்கள் உயிருடன் மீட்கப்பட்டபோது உலகமே வியந்தது. விமானம் விபத்துக்குள்ளாகி, தங்கள் தாயை இழந்த பிறகு, அவர்கள் காட்டில் நாற்பது நாட்கள் உயிர் பிழைத்துள்ளனர். காட்டின் கடுமையான நிலப்பரப்பை நன்கு அறிந்த குழந்தைகள், காட்டு விலங்குகளிடமிருந்து மரத்தடிகளில் ஒளிந்துகொண்டு, ஓடைகள் மற்றும் மழைநீரைப் புட்டிகளில் சேகரித்து, விமான சிதைவிலிருந்து மரவள்ளிக்கிழங்கு மாவு போன்ற உணவைச் சாப்பிட்டனர். எந்த காட்டுப் பழங்கள் மற்றும் விதைகளை உண்பது பாதுகாப்பானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

தேவன் அவர்களை ஆதரித்தார்.

அவர்களின் நம்பமுடியாத கதை, நாற்பது ஆண்டுகளாக வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களை தேவன் எவ்வாறு அற்புதமாகத் தாங்கினார் என்பதை எனக்கு நினைவூட்டுகிறது, இது யாத்திராகமம் மற்றும் எண்ணாகவும் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டு வேதாகமம் முழுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தங்கள் தேவன் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய ஜீவனைக் காப்பாற்றினார்.

தேவன் கசப்பான நீரூற்று நீரைக் குடிநீராக மாற்றினார், இரண்டு முறை பாறையிலிருந்து தண்ணீரை வழங்கினார், மேலும் பகலில் மேக ஸ்தம்பத்திலும் இரவில் நெருப்பு ஸ்தம்பத்திலும் தம் ஜனங்களை வழிநடத்தினார். அவர்களுக்கு மன்னாவையும் வழங்கினார். "அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம். கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் புசிக்கும் அளவுக்குத் தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள்” (யாத்திராகமம் 16:15-16).

அதே தேவன் நமக்கு "வேண்டிய ஆகாரத்தை இன்று" (மத்தேயு 6:11) வழங்குகிறார் . "கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே " (பிலிப்பியர் 4:19) நம்முடைய தேவைகளை அவர் சந்திப்பார் என்று நாம் நம்பலாம். எப்பேர்ப்பட்ட வல்லமையுள்ள தேவனை நாம் சேவிக்கிறோம்!

மகிழ்ச்சியின் வேகம்

"மகிழ்ச்சியின் வேகத்தில் செல்லுங்கள்" ஒரு நாள் காலையில் வரவிருக்கும் ஆண்டை குறித்து நான் ஜெபத்துடன் சிந்தித்தபோது, இந்த வாக்கியம் என் மனதில் பட்டது, அது பொருத்தமானதாகத் தோன்றியது. எனக்கு அதிக வேலை செய்யும் நாட்டம் இருந்தது, அது என் மகிழ்ச்சியை அடிக்கடி பறித்தது. எனவே, இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி, நண்பர்கள் மற்றும் சநதோஷகாரமான செயல்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில், வரும் ஆண்டில் மகிழ்ச்சிகரமான வேகத்தில் பணியாற்ற நிச்சயித்தேன்.

இந்த திட்டம் பலன் கொடுத்தது; மார்ச் வரை! பின்னர் நான் உருவாக்கும் ஒரு பாடத் திட்டத்தின் சோதனையை மேற்பார்வையிட ஒரு பல்கலைக்கழகத்துடன் கூட்டுச் சேர்ந்தேன். மாணவர் சேர்க்கை மற்றும் பாடம் தயாரித்தல் என்று  நான் விரைவில் நீண்ட நேரம் உழைத்தேன். இப்போது நான் எப்படி மகிழ்ச்சியின் வேகத்தில் செல்வேன்?

இயேசு தம்மை விசுவாசிக்கிறவர்களுக்குச் சந்தோஷத்தை வாக்களிக்கிறார், அது அவருடைய அன்பில் நிலைத்திருப்பதன் மூலமும் (யோவான் 15:9) ஜெபத்துடன் நம்முடைய தேவைகளை அவரிடம் கொண்டு செல்வதன் மூலமும் வருகிறது என்று கூறுகிறார் (16:24). "என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்" (15:11) என்கிறார். இந்த மகிழ்ச்சி அவருடைய ஆவியானவர் மூலம் ஒரு கனியாக வெளிப்படுகிறது, அவருடன்தான் நாம் நடக்க வேண்டும் (கலாத்தியர் 5:22-25). ஒவ்வொரு இரவும் இளைப்பாறுதலான, நம்பிக்கையான ஜெபத்தில் நேரத்தைச் செலவழித்தபோதுதான் என்னுடைய வேலை மிக்க காலத்தில் மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

மகிழ்ச்சி மிகவும் அவசியமானதால், நமது முக்கியத்துவங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது ஞானமுள்ள காரியம். ஆனால் வாழ்க்கை முழுவதுமாக நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், மகிழ்ச்சியின் மற்றொரு ஆதாரமான ஆவியானவர் நமக்குக் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப் பொறுத்தவரை, இப்போது மகிழ்ச்சியின் வேகத்தில் செல்வது என்பது ஜெபத்தின் வேகத்தில் செல்வதைக் குறிக்கிறது; மகிழ்ச்சியைத்  தருபவரிடமிருந்து பெற்றுக்கொள்ள நேரம் ஒதுக்குவதாகும்